• sujathaசுஜாதாவின் பத்துக் கட்டளைகள்…

    1. ஒன்றின் மேல் நம்பிக்கை வேண்டும், ஏதாவது ஒன்று. உதாரணம் கடவுள், இயற்கை, உழைப்பு, வெற்றி இப்படி எதாவது… நம்பிக்கை நங்கூரம் போல. கேள்வி கேட்காத நம்பிக்கை. கேள்வி கேட்பது சிலவேளை இம்சை. நவீன விஞ்ஞானம் அதிகப்படியாகக் கேள்வி கேட்டு இப்போது தவித்துக் கொண்டிருக்கிறது.

    2. அப்பா, அம்மா இரண்டு பேரும் வேலை சொல்வது பல சமயங்களில் கடுப்பாக இருக்கும். ஒருமாறுதலுக்கு அவர்கள் சொல்வதைச் செய்து பாருங்கள். அவர்கள் கேட்பது உங்களால் செய்யக் கூடியதாகவே இருக்கும். பொடிநடையாகப் போய் நூறு கிராம் காப்பி பவுடர் (அ) ரேஷன் கார்டு புதுப்பித்தல் இப்படிதான் இருக்கும்.

    3. மூன்று மணிக்குத் துவங்கும் மாட்டனி போகாதீர்கள். க்ளாஸ் கட்பண்ண வேண்டி வரும். தலைவலி வரும். காசு விரயம். வீட்டுக்குப் போனதும் பொய் சொல்வதற்கு ரொம்ப ஞாபக சக்தி வேண்டும். இந்த உபத்திரத்துக்கு உண்மையைச் சொல்லிவிடுவது சுலபம். இளமைக்காலம், ஒளிக் கீற்றைப் போல் மிகவும் குறைந்த காலம், அதை க்யூ வரிசைகளிலும் குறைபட்ட தலைவர்களுக்காகவும் விரயம் செய்யாதீர்கள்.

    4. நான்கு பக்கமாவது ஒரு நாளைக்குப் பொது விஷயங்களைப் படியுங்கள். பொது விஷயங்கள் என்றால் கதை, சினிமா, காதல் இல்லாதவை. உதாரணம் – யோக்கியமான செய்தித்தாள், மற்ற பேரைப் பற்றிக் கவலைப்படும் பத்திரிகைகள் அல்லது லைப்ரரியிருந்து ஒரு புத்தகம்.

    5. ஐந்து ரூபாய் சம்பாதித்துப் பாருங்கள். சொந்தமாக உங்கள் உழைப்பில், முயற்சியில், யோக்கியமாக, மனச்சாட்சி உறுத்தாமல். அடுத்த முறை அப்பாவிடம் ஆயிரம் ரூபாய்க்கு ஷர்ட், சுடிதார் கேட்கும் முன்.

    6. இந்தச் தகவல்களை படிக்கும் நிலைமை பெற்ற நீங்கள் இந்திய சனத்தொகையின் மேல்தட்டு ஆறு சதவிகித மக்களில் ஒருவர். அன்றாடம் சோற்றுக்காக அலையும், வசதியில்லாத கோடிக்கணக்கான மக்களைத் தினம் ஒரு முறை எண்ணிப் பாருங்கள்.

    7. வாரத்தின் ஏழாவது தினமான ஞாயிறன்று என்ன செய்தாலும் காதல் பிஸினஸ் வேண்டாம். காதலுக்கு ரொம்பச் செலவாகும். மனம், வாக்கு, காயம்(உடல்), எல்லாவற்றையும் ஆக்கிரமிக்கும் தீ அது. பொய் நிறையச் சொல்ல வேண்டும். வினோதமான இடங்களில் காத்திருக்க வேண்டும். இந்த வயதில் நாசமாய்ப்போன படிப்புத்தான் உங்களுக்கு முக்கியம்.குறிப்பு: பெண்களை சைட் அடிப்பதும், கலாட்டா பண்ணுவதும், அவர்களுக்கு கர்சீப் முதலியன ரோடிலிருந்து பொறுக்கிக் கொடுப்பதும், உபத்திரமில்லாத கவிதைகள் எழுதுவதும், காதலோடு சேர்த்தியில்லை.

    8.எட்டு முறை மைதானத்தை சுற்றி ஓடினால் எந்தச் சீதோஷ்ணமாக இருந்தாலும் நெற்றி வியர்வை அரும்பும். எதாவது தேகப் பயிற்சி செய்யவும். கடிகாரத்துக்குச் சாவி கொடுப்பதோ சீட்டாடுவதோ தேகப் பயிற்சி ஆகாது. எதையாவது தூக்குங்கள், எதையாவது வீசி எறியுங்கள். உங்கள் உடலில் ஊறும் உற்சாகத்துக்கு ஓர் ஆரோக்கியமான வடிகால் தேவை. ராத்திரி சரியாக தூக்கம் வரும். கன்னா பின்னா எண்ணங்கள் தவிர்க்கப்படும். ஒழுங்காக சாப்பிடத்தோன்றும். பொதுவாகவே சந்தோஷமாக இருக்கும்.

    9. ஒன்பது மணிக்குள் வீட்டுக்கு வரவும். மிஞ்சிப் போனால் ஒன்பது மணி இரண்டு நிமிடம். ஒரு மணி நேரம் பாடம் அல்லது புத்தகம் படிக்கலாம்.

    10. படுக்கப் போகும் முன் பத்து நிமிஷமாவது அம்மா, அப்பா, அண்ணன், தங்கை யாருடனாவது பேசவும் (பேசுவது என்று சொன்னவுடன் காதலியுடன் என்று நினைக்க வேண்டாம், நான் சொன்னது குடும்பத்தினருடன் மட்டும்). எதாவது ஒரு அறுவை ஜோக் அல்லது காலேஜில் நடந்த நிகழ்வுகள். சப்ஜெக்ட் முக்கியமில்லை. பேசுவது தான்.

    இந்த பத்தில் தினம் ஒன்று என்று முயற்சி செய்து தான் பாருங்களேன்.

    1 Comment
  • 2005ல் அமரர் சுஜாதா கற்றதும் பெற்றதும் பகுதியில் 2010ல் இந்தியா / உலகம் எப்படி இருக்கும் என்பது பற்றி எழுதியுள்ளார். சில விஷயங்கள் அவர் நையாண்டியாக சொன்னாலும் இன்றைய நிலையும் அதுவே.

    2010 என்பது அருகிலும் இல்லாத, தூரத்திலும் இல்லாத ஒரு ரெண்டுங்கெட்டான் எதிர்காலம். அதைப் பற்றி எழுதுவது ‘நிஜமாவதற்கும் பொய்த்துப் போவதற்கும் சம சாத்தியங்கள் உள்ளன.
    புள்ளி விவரங்களை மட்டும் கவனித்து எதிர் நீட்டினால் 2010ல்

    – செல் போன்கள் இரட்டிப்பாகும்
    – மக்கள் தொகை 118 கோடியாகும்
    – போக்குவரத்து அதிகரித்து நகரங்களில் அனைவரும் மாஸ்க் அணிவோம்
    – பெண்கள் வருஷம் மூன்று தினம் புடவை கட்டுவார்கள்
    – ஆண்கள் அதிக அளவில் தலை முடியை இழப்பார்கள்
    – ஒரு பெரிய மதக் கலவரம் இந்தியாவில் வரும்
    – ராகுல் பிரதமர் ஆவார்
    – தமிழ்நாட்டில் அ.தி.மு.க அல்லது தி.மு.க கூட்டணி ஆட்சி நடக்கும்.
    – தயாரிப்பாளர்கள் பலரின் பிள்ளைகள் படம் எடுப்பார்கள்
    – அலுவலகத்தில் செய்வது அத்தனையும் செல்போனில் செய்ய முடியும்.
    – கவிதைத் தொகுப்புகளில் காதல் குறையும்
    – வாரப் பத்திரிகைகளில் தொடர்கதைகளும் சிறுகதைகளும் அறவே நீக்கப்பட்டு, முழுக்க முழுக்கப் பெண்கள் படங்களாக, ஒரிரண்டு வாக்கியங்களுடன் வெளிவரும்
    – செய்தித்தாள்கள் படிப்பதற்குக் காசும், இலவச பிஸ்கட் பாக்கெட்டும் கொடுப்பார்கள்.
    – தமிழ் படிக்கத் தெரிந்தவர்கள் வெளிநாட்டில் அதிகம் இருப்பார்கள்.
    – அரசியல் மேடைகளில் மட்டும் தமிழ் உணர்வு மிச்சமிருக்கும்
    – மற்றொரு சுனாமி வரும்; ஒரு கடலோர நகரம் அழியும்.

    – முடிவெட்டுக்கு ஆயிரம் ரூபாய் கொடுக்க வேண்டி வரும்
    – புத்தகங்கள் குறையும்.
    – மருத்துவமனைகளில் இடம் போதாது…

    இவ்வாறு சொல்லிக் கொண்டே போகலாம். பிரச்சனை என்னவென்றால் 2010ல் நான் பிழைத்திருந்து, ‘என்னய்யா.. அப்படிச் சொன்னார், நடக்கவில்லையே’ என்று என் வார்த்தைகளை சர்பத்தில் கரைத்து குடிக்கக் காத்திருபார்கள். வயிற்றைப் புரட்டும்.
    – நன்றி : விகடனின் கற்றதும் பெற்றதும்.

    [ எழுத்தாளர் சுஜாதா இறந்தது பிப்ரவரி 2008]

    Related Posts Plugin for WordPress, Blogger...
    No Comments